WhatsApp 12வது பிறந்த நாள்: வாட்ஸ் அப் பற்றி நீங்கள் அதிகம் அறியாத தகவல்கள் இதோ! - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 25 February 2021

WhatsApp 12வது பிறந்த நாள்: வாட்ஸ் அப் பற்றி நீங்கள் அதிகம் அறியாத தகவல்கள் இதோ!

WhatsApp 12வது பிறந்த நாள்: வாட்ஸ் அப் பற்றி நீங்கள் அதிகம் அறியாத தகவல்கள் இதோ! 


 வாட்ஸ் அப் சேவை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டாலும், தகவல் பரிமாற்றத்திற்கு இணையவாசிகள் விரும்பி நாடும் மெசேஜிங் சேவையாக இதுவே இருக்கிறது. வாட்ஸ் அப் இந்த அளவு விரும்பி பயன்படுத்தப்படுவதற்கு முக்கியக் காரணம் அதன் எளிமையான இடைமுகம். வாட்ஸ் அப்பில் உறுப்பினராக இணைவது முதல், உரையாடலை துவங்குவது, குழுக்களை அமைப்பது என எல்லாவற்றையும் எளிதாக மேற்கொள்ளலாம். 

 இந்த பயன்பாட்டு அம்சமே வாட்ஸ் அப்பை முன்னணி மெசேஜிங் சேவையாக உயர்த்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிக அளவில் பயனாளிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. இந்தியர்கள் பலர் வாட்ஸ் அப்’பில் காலை வணக்கம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பழகியிருக்கின்றனர். 

வாட்ஸ் அப் வெப், வாட்ஸ் அப் பிசினஸ். வாட்ஸ் அப் பண பரிவர்த்தனை சேவை என பல பிரிவுகளில் பரந்து விரிந்த சேவை அளிக்கும் வாட்ஸ் அப், கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துவங்கப்பட்டது. வாட்ஸ் அப் பிறந்த தினத்தில், இணைய விருட்சமாக வளர்ந்திருக்கும் இந்த சேவை தொடர்பாக பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்: வாட்ஸ் அப் நிறுவனர்கள் பிரையான் ஆக்டன் மற்றும் ஜான் கவும் ஆகியோரால் வாட்ஸ் அப் துவக்கப்பட்டது. 

பிரையான் ஆக்டன் அமெரிக்காவைச்சேர்ந்தவர். இருவருமே யாஹுவின் முன்னாள் ஊழியர்கள். 2009 ஜனவரியில் புத்தம் புதிய ஐபோனை வாங்கி பயன்படுத்தியவர்கள், அதன் செயலிகளால் சொக்கிப்போய் தாங்களும் ஒரு செயலியை உருவாக்கத் தீர்மானித்தனர். செல்போன் எண்ணுக்கு அருகே, நிலைத்தகவல் தோன்றும் வகையிலான தகவல் பரிமாற்ற சேவையை வழங்க தீர்மானித்தனர். இப்படி தான் WhatsaApp மேசேஜிங் சேவை உருவானது. 

பெயர் காரணம் 

இன்று கூகுள் போல, வாட்ஸ் அப்'பும் தகவல் பரிமாற்றத்திற்கான வினைச்சொல் போலாகிவிட்டது. என்ன நடக்கிறது எனும் தகவல் அறிவதற்கான சேவையாக கருதப்படும், வாட்ஸ் அப், என்ன நடக்கிறது? என கெத்தாக கேட்கும் ஆங்கில வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டது. 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2009 பிபர்வரி 24 ல் வாட்ஸ் அப் நிறுவப்பட்டது. ஆனால் துவக்க மாதங்களில் வாட்ஸ் அப் செயலி நிறைய சிக்கலை சந்தித்தது. இதனால் வெறுத்துப்போன கவும், வேறு வேலை தேடும் உத்தேசத்தில் இருந்தார். ஆனால், ஆக்டன் தான் அவரை சில மாதங்கள் பொருத்திருக்குமாறு பிடித்து வைத்தார். அதன் பிறகு வாட்ஸ் அப் வெற்றிக் கதையானது. கட்டண சேவை வாட்ஸ் அப் இலவச சேவை வழங்கி வந்தாலும் துவக்கத்தில் அது கட்டணச்சேவையாக இருந்தது. ஆண்டு சந்தாவாக ஒரு டாலர் அளிக்க வேண்டும் என ஆரம்பத்தில் கூறிய வாட்ஸ் அப் 2016ல் தான் இலவசச் சேவையானது. 

வாட்ஸ் அப் சேவையை பலதரப்பினரும் பயன்படுத்தும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ் அப் வர்த்தக நிறுவனங்களுக்கான பிரத்யேக சேவையைத் துவக்கியது. இந்த சேவையை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள் பயனாளிகள் தகவலுக்கு தாமதமாக பதில் அளித்தால் அபராதம் செலுத்த வேண்டும். வாட்ஸ் அப் மதிப்பு வாட்ஸ் அப் வேகமாக வளர்ந்து வரும் சேவையாக இருந்த போதே ஃபேஸ்புக் நிறுவனம் அதை கையகப்படுத்தியது. அதன் பிறகு இன்னும் வேகமாக வளர்ந்த வாட்ஸ் அப், தற்போது 50.7 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது. 

ஒரு சில நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இது அதிகம். உதாரணமாக செர்பியாவின் ஜிடிபி 50.6 பில்லியன் டாலர் தான் அமெரிக்க ஏர்லைன்ஸ் (15 பில்லியன் டாலர்), ஹார்லி டேவிட்சன் (6 பில்லியன் டாலர்) போன்ற நிறுவனங்களை எல்லாம் விட வாட்ஸ் அப் மதிப்பு மிக்கது. விளம்பரம் இல்லை வாட்ஸ் அப் வேகமாக வளர்ச்சி கண்டாலும், வளர்ச்சிக்காக அந்நிறுவனம் விளம்பரத்திற்கு என்று எந்த தொகையும் செலவிடவில்லை என்பது ஆச்சர்யம் அளிக்கலாம். 

அதன் நிறுவனர்கள், விளம்பரத்தை நாடாமல், எவரும் எளிதாக பயன்படுத்தும் சேவையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்றனர். தேடி வந்த வாய்ப்பு வாட்ஸ் அப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஜான் கவும் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர். சோவியத் யூனியன் அங்கமாக இருந்த உக்ரைன் நாட்டில் பிறந்தவர் அதன் பிறகு அமெரிக்காவில் குடியேறினார். 

2007ம் ஆண்டு வரை யாஹு நிறுவனத்தில் பணியாற்றியவர், பின்னர் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வேலை தேடினார். ஃபேஸ்புக்கில் நேர்காணலுக்கு சென்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், சில ஆண்டுகள் கழித்து அவர் இணை நிறுவனராக துவக்கிய வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியது. வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் விலைக்கு வாங்கிய போது அதனிடம் 55 ஊழியர்கள் தான் இருந்தனர். வாட்ஸ் அப் தாக்கம் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்திற்கு உதவினாலும், அதன் சேவை பல தருணங்களில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 

2017ம் ஆண்டில் இந்தியாவில் வதந்திகள் பரவி கலவரம் வெடிக்க வாட்ஸ் அப் காரணமானது. 2018 பிரேசில் தேர்தலிலும் வாட்ஸ் அப் பகிர்வுகள் தாக்கம் செலுத்தின. வாட்ஸ் அப் வதந்தி மற்றும் பொய்செய்திகளின் வாகனமானதை தடுத்து நிறுத்த நிறுவனம், குறிப்பிட்ட முறைக்கு மேல் செய்திகளை ஃபார்வேர்டு செய்யும் வசதியைக் கட்டுப்படுத்துவது, தகவல் சரி பார்க்கும் வசதி உள்ளிட்ட அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. 

 ஃபேஸ்புக் தாக்கம் ஃபேஸ்புக்கின் அங்கமான பிறகு வாட்ஸ் அப் எண்ணற்ற வசதிகளையும் புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்துள்ளது. எனினும் துவக்கத்தில் அளித்த பிரைவசி வாக்குறுதியில் இருந்து நிறுவனம் பாதை மாறிவிட்டதாகவும் விமர்சனம் இருக்கிறது. ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப் என அழைக்கப்படுவது ஒரு காரணமாக இருக்கலாம். இணைய உலகின் மாபெரும் வெற்றிக்கதைகளில் ஒன்றாகக் கருதப்படும் வாட்ஸ் அப்பின் நிறுவனர்கள் இருவருமே தற்போது நிறுவனத்தில் இல்லை. 

பிரையான் ஆக்டன் மற்றும் ஜான் கவும் இருவருமே பின்னர் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறிவிட்டனர். 2017ல் ஆக்டன், பாதுகாப்பான மெசேஜிங் சேவையாக கருதப்படும் சிக்னல் சேவையை வழங்கி வரும் சிக்னல் அறக்கட்டளையை துவக்கி நடத்தி வருகிறார். கவும் சுதந்திர மென்பொருள் இயக்கத்தில் தீவிரமாக இருக்கிறார். எனிவே இன்று வாட்ஸ்-அப் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை எட்டியுள்ள WhatsAppக்கு 12வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment