யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வை எழுத மறுவாய்ப்பு கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 25 February 2021

யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வை எழுத மறுவாய்ப்பு கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வை எழுத மறுவாய்ப்பு கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 


யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வை எழுத மறுவாய்ப்பு கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. 

 மறுவாய்ப்பு கோரி மனு 

 கொரோனா காரணமாக, கடந்த அக்டோபரில் நடத்தப்பட்ட யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வை இறுதிவாய்ப்பு பெற்று சரியாக எழுத முடியாமல் போனவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கக் கோரி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரச்சனா உள்ளிட்ட 59 பேர் தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரித்தது. 


 மத்திய அரசு தகவல் 

 கடந்த விசாரணையின் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படாது என்ற மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டையும், இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராஜு, கொரோனா காரணமாக யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வை இறுதி வாய்ப்பு பெற்று சரியாக எழுத முடியாமல் போன, வயதுவரம்பு தாண்டியவர்களை தவிர்த்து பிறருக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்க மத்திய அரசும், யுபிஎஸ்சியும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த மறுவாய்ப்பை முன்னுதாரணமாக கொள்ளக் கூடாது, எதிர்காலத்தில் இந்த மறுவாய்ப்பை சுட்டிக்காட்டி யாரும் உரிமை கோரக் கூடாது என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி 9-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

 தள்ளுபடி 

 இந்தநிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அளித்த தீர்ப்பில், கடந்த அக்டோபரில் நடத்தப்பட்ட யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வை இறுதி வாய்ப்பு பெற்று சரியாக எழுத முடியாமல் போன சிலருக்கு மட்டும் இந்த கோர்ட்டு சலுகை காட்டுவது ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குவதாகிவிடும். அடுத்தடுத்து நடைபெறும் தேர்வுகளை பாதிக்கும். சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவு, எதிர்காலத்தில் இதுபோன்ற விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை கட்டுப்படுத்தாது என்பதை தெளிவுபடுத்தி, மனுவை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment